• Tue. Sep 15th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ; பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல் !!!

BySeenu

Jul 29, 2026

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் கோவை குற்றாலம் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (29.07.2026) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.

​கோவையின் முக்கியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சாடிவயல் – கோவை குற்றாலம் பகுதியில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் வந்து அருவியில் நீராடி மகிழ்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைக் காடு மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் அதிமேலடுக்கு மழை காரணமாக அருவிக்கு வரும் நீரின் அளவு ஆபத்தான கட்டத்தைத் தாண்டி உள்ளது.

​அருவியில் சீறிப்பாயும் வெள்ள நீரால் சுற்றுலாப் பயணிகளுக்குப் பேராபத்து ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் வனத்துறை சார்பில் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், “பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (29/07/2026) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. நீர்வரத்து சீராகி இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இன்று கோவை குற்றாலம் செல்லத் திட்டமிட்டு இருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.