• Sun. Jun 30th, 2024

நீட் சர்ச்சையால் ஜூலை 1 வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

Byவிஷா

Jun 28, 2024

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நீட் குறித்த சர்ச்சையால் வருகிற ஜூலை 1ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முதல் 2 நாட்கள் எம்பிக்கள் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து புதன்கிழமை அன்று மக்களவை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. நேற்றைய நாளில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அதில் பல திட்டங்களை அவர் அதில் முன்மொழிந்தார். அதன்பின் இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற இருந்தது. இதைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை ஒத்திவைத்து நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக் கோரினர். அவர்களின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 12 மணி வரையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின் மீண்டும் 12 மணிக்கு அவை கூடியபோது, அப்போதும், இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் நீட் விவகாரம் குறித்து கோஷங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து, இரு அவைகளும் திங்கள்கிழமை (ஜூலை 1) வரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *