நடிகரும், தயாரிப்பாளரும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நெருங்கிய நண்பருமான ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் இருந்து விலகி, கூட்டணிக் கட்சியான இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் நடிகர் ஆர்.கே.சுரேஷ். இவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டு பாஜகவில் இணைந்து முக்கிய பதவியைப் பெற்றார். இதனிடையே, ஆருத்ரா கோல்டு நிறுவனம் முறைகேடு வழக்கில் ஆர்.கே.சுரேஷிடம் சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணையும் நடத்தினர். ஆரூத்ரா வழக்குக்கு பிறகு பாஜகவில் ஆர்.கே.சுரேஷ{க்கு முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இதனால் சுரேஷ் கடும் அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் கட்சியிலிருந்து விலகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்திய ஜனநாயகக் கட்சியில் இணைந்த ஆர்.கே.சுரேஷை அகில இந்திய அமைப்புச் செயலாளராக நியமித்து அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிட்ட நிலையில், ஆர்.கே.சுரேஷ் கூட்டணிக் கட்சியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.