• Tue. Feb 18th, 2025

பிரான்ஸில் பிரதமர் ஆட்சி கவிழ்ப்பு

Byவிஷா

Dec 5, 2024

பிரான்ஸ் நாட்டின் 60 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரதமர் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முதல்வர் மிஷேல் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மூன்றே மாதத்தில் அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது. பிரதமர் மிஷேல் பார்னியர் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதால், அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரான்ஸ் பிரதமரான மூன்றே மாதத்தில் பதவியை இழந்தார் மிஷேல் பார்னியர்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். இத்தேர்தலில், மேக்ரானின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆகியவை போட்டியிட்டன. இதில் அதிதீவிர வலதுசாரிகளின் தேசிய பேரணி கட்சி வெற்றி பெற்றது. இந்தக் கட்சிக்கு அதிபரின் ஆதரவும் கிட்டியது. இருந்தாலும் மைனாரிட்டி அரசாகத்தான் அக்கட்சி ஆட்சியமைக்க முடிந்தது. இதனையடுத்து பிரான்ஸின் புதிய பிரதமராக மிஷேல் பார்னியர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மிஷேர் பார்னியர் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்களும் நடைபெற்றன.
சர்ச்சைக்கு வழிவகுத்த பட்ஜெட்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மிஷேல் பார்னியேர் 2025-ம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். இந்த பட்ஜெட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் மேக்ரோனின் ஆதரவு இருப்பதால் அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பட்ஜெட்டை எப்படியும் நிறைவேற்றியே தீருவேன் என மிஷேல் பார்னியேர் கூறியிருந்தார்.

இதனால், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மிஷேல் பார்னியேருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மிஷேல் பார்னியர் தோல்வியடைந்தார். மொத்தமுள்ள 577 உறுப்பினர்களில் 331 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த தோல்வியைத் தொடர்ந்து தமது பிரதமர் பதவியை மிஷேல் பார்னியேர் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து அதிபரும் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.