நகைச்சுவை நடிகர் மயில்சாமி சிவராத்திரியையொட்டி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தது, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மயில்சாமியின் நெருங்கிய நண்பரான நடிகர் விவேக்கின் உதவும் குணம் குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
விவேக் தனது பேச்சில், “எம்ஜிஆரின் தீவிர ரசிகரான மயில்சாமி அவரை போலவே பிறருக்கு ஓடிச்சென்று உதவும் குணம் கொண்டவர். நாம பார்க்கும்போது மயில்சாமி நல்லவனா இளிச்சவாயனா என தோன்றும். ஷீரடி சாய்பாபா மாதிரி ஒருநாள் பாத்தா பணக்காரனாக இருப்பான், ஒரு நாள் பாத்தா ஏழையாக இருப்பான். நல்ல மனிதன். யாருக்கு தேவைனாலும் உடனே உதவி செய்து விட்டு வெறும் ஆளாக நிற்பான்.
சுனாமி பாதிப்பின்போது பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கடலூர் மாவட்டத்திற்கு வந்து மக்களுக்கு உதவிகளை செய்தார். அதைப்பார்த்து நெகிழ்ந்து போன மயில்சாமி தான் பங்கிற்கும் ஏதேனும் உதவ வேண்டும் என கடலூருக்கு விரைந்து சென்றார். அங்கிருந்த விவேக் ஓபராயை சந்தித்து தனது எம்ஜிஆர் டாலர் பதித்த தங்க சங்கலியை அவரது கழுத்தில் மாட்டிவிட்டு ஒருவார்த்தை கூட பேசாமல் வந்துவிட்டார்.
அதேபோல, ஒரு புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின்போது நிகழ்ச்சி ஒன்றில் வாசித்த இசை கலைஞர் ஒருவருக்கு தனது கையில் இருந்த பணத்தை எல்லாம் அன்பாக கொடுத்துவிட்டு, ஆட்டோவுக்கு பணம் இல்லாமல் என்னிடம் வாங்கிச் சென்றார்.பாரதியார் போல தனது தேவைக்கான பணத்தை பற்றி ஒரு துளி கூட கவலைப்படாமல் பிறருக்கு தந்து உதவி செய்யும் குணம் கொண்டவன். யாருக்காவது படிப்புக்கு உதவித்தேவை என்றால் தன்னிடம் பணம் இல்லாத போது நடிகர் சத்யராஜ் போன்ற சக நடிகர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் பணம் வாங்கி உதவி செய்யும் குணம் கொண்டவன் மயில்சாமி” என நடிகர் விவேக் பேசியிருப்பார்.
சினிமா துறையைத் தாண்டி பொதுநலம் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்ற மயில்சாமியின் இழப்பு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.