• Mon. May 20th, 2024

தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் அதிரடி மாற்றம்..!

Byவிஷா

Mar 1, 2022

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது. அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு குறித்த விவரங்களை தகவல் பலகையில் தெரியப்படுத்த வேண்டும். தரமான பொருட்களை விநியோகிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்;- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை, ரேஷன் கடைகள் செயல்பட வேண்டும். இதரப் பகுதிகளில், காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 6 மணி வரை, நியாய விலைக் கடைகள் இயங்க வேண்டும்.
மேற்கண்டவாறு நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் பின்பற்றப்படுவதில்லை. மாவட்டங்களில் நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரம் பெரும்பாலான கடைப் பணியாளர்களுக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை என்பதை அறிய முடிகிறது.
எனவே மாதாந்திர நியாய விலைக் கடை பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்து தெரிவித்து, குறித்த நேரத்தில், நியாய விலைக் கடைகளை திறந்து செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும். மேலும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வகையில் நியாய விலைக் கடையின் தகவல் பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *