

சிறைக்காவலர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தும் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைகாவலர்களை உயரதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனக்கூறி சுஜாதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டினர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, ஆர்டர்லி முறையை ஒழிக்க விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

