தன் மகளை விட அதிகம் மதிப்பெண் பெற்றதால் ஆத்திரமடைந்த மாணவியின் தாய் மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பால மணிகண்டன் தனியார் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்ற பால மணிகண்டன் மதியம் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியபோது, பள்ளியின் காவலாளி கொடுத்த குளிர்பானத்தை குடித்த பின்னரே இப்படி நடப்பதாக கூறியுள்ளார்.மாணவரை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் பள்ளிக்கு சென்று இதுகுறித்து விசாரித்தனர். அப்போது, பள்ளி சார்பில் குளிர்பானம் கொடுக்கவில்லை என்று கூறியதால் பள்ளி காவலாளியிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது காவலாளி மாணவரின் உறவினர் ஒருவர் கொடுக்கச் சொன்னதாக கூறியுள்ளார். பின்னர் இதுதொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தியபோது, மாணவன் பயிலும் அதே வகுப்பை சேர்ந்த மாணவியின் பெற்றோர் குளிர்பானத்தை கொடுத்தது தெரியவந்தது.
மாணவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதால் இது குறித்து மாணவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீஸார் குளிர்பானம் கொடுத்த மாணவியின் தாயாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மாணவன் பாலமணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.