மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சி விக்கிரமங்கலம் சாலையில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி அருகில்
பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுவதால் தொற்றுநோய் பரவி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். இந்தப் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள் தனியார் ஏடிஎம் மையம் திருமண மஹால் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி ஆகியவை உள்ளது. மேலும் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை 500-க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தக்கூடிய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப் பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி சாலைகளில் ஆறாக ஓடுகிறது. அருகிலேயே அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

சாலையில் ஓடும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது இதனால் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அருகிலேயே திருமண மண்டபமும் உள்ளது மாதத்திற்கு 10 முதல் 15 நாட்கள் முகூர்த்த நாட்களில் இங்கு விழாக்கள் நடைபெற்று வருகிறது. இங்கு வரும் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகையால் மேலக்கால் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த கழிவுநீர் கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேலக்கால் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று கழிவுநீர் தேங்கி பல்வேறு பகுதிகளில் சுகாதாரத் கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் வாடிப்பட்டி யூனியன் நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு தேங்கியுள்ள கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




