தெலங்கானாவில் சிலிண்டரில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஒட்டி அதில் விலையையும் சேர்த்து பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜஹீராபாத் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தார். அப்போது, கடைகளில் ஏன் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களுக்கு பெரும் பங்கை மத்திய அரசு வழங்குகிறது எனவும், கோரோனா பெருந்தொற்று காலங்களில் மத்திய அரசு இலவசமாக பொருட்கள் வழங்குவதையும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர்களில் பிரதமரின் புகைப்படத்தை ஒட்டி டி.ஆர்.எஸ் கட்சி விநியோகித்து வருகிறது. அதில் பிரதமர் சிரித்து கொண்டிருப்பது போலவும் மேலே கேஸ் சிலிண்டரின் விலை ரூ.1105 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை உயர்வை விமர்சனம் செய்யும் விதமாக டி.ஆர்.எஸ் கட்சி இவ்வாறு பரப்புரை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.