தமிழக அரசின் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் 4நாட்களாக போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி விசைத்தறி உரிமையாளர்கள் 2 லட்சம் விசைத்தறியை நிறுத்தி 4-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மேலும் விசைத்தறிக்கு சிறப்பு பிரிவின் கீழ் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த மின்சாரம், தற்போது சிறு, குறு என்ற பொது அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு 30மூ மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 6மூ மின் கட்டண உயர்வு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து, கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து 4வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி அவிநாசி, தெக்கலூர், சாமளாபுரம் மற்றும் கோவை மாவட்டத்தில் சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள், அவர்களது 2 லட்சம் விசைத்தறியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பேசிய அவர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் சுமை எனவும் வருமானம் இன்றி தவிக்கும் விசைத்தறியாளர்கள் மின்கட்டண உயர்வை செலுத்த இயலாது என்பதால் தொழிலை விடுத்து வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக ரூ. 95 கோடி மதிப்பிலான 3 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.