• Sat. Mar 7th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

கோவை புத்தக திருவிழாவில் காவி நிறத்தில் திருவள்ளுவர்..,
விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியர்..!

Byவிஷா

Jul 29, 2022

கோவையில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவர் காவி நிறத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை கொடிசியா வளாகத்தில் 6 வது புத்தக கண்காடசி நடைபெற்று வருகின்றது. மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய பதிப்பாளர்கள் இணைந்து இந்த புத்தக திருவிழாவை நடத்தி வருகின்றனர். ஜூலை 31ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று கோவை மாநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 5ஆயிரம் பேர் “திருக்குறள் திரள் வாசிப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது. 10 அதிகாரங்களில் இருந்து 20 குறள்களை அனைத்து மாணவ மாணவிகளும் திரளாக வாசித்தனர். ஆசிரியர்கள் சொல்ல சொல்ல திருக்குறள் வாசிக்கப்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் அக்குறளுக்கான விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் தமிழறிஞர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக பேராசிரியர் ராஜாராம் கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
மேலும் ஒழுக்கம், கல்வி, செல்வம் ஆகிய அதிகாரங்களில் இருந்து 4 திருக்குறள்களை ஆட்சியர் வாசிக்க வாசிக்க மாணவர்களும் திருப்பி வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. அந்த புத்தகத்தில் காவி நிறத்தில் திருவள்ளுவர் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்க்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக சர்ச்சை ஏற்பட்டது.
இந்த நிகைழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சமீரன், இந்த திருக்குறள் திரள் வாசிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்ததாகவும், இதில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தார். மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேச்சுபோட்டிகள் நடைபெற்றதாகவும் கூறினார். மேலும் அனைவரும் ஒரு புத்தகமாவது வாங்கி செல்வோம் என உறுதி கூறியுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவரின் ஓவியம் காவி நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், அது தவறான கருத்து, நார்மலாக தான் அச்சடிக்கப்பட்டது, அதனை பார்வையின் குழப்பம் என சொல்லலாம். நான் திருக்குறள் புத்தகத்தின் சட்டையை பார்க்கவில்லை அதனுள் என்ன எழுதி உள்ளது என்று தான் பார்த்தேன். அதில் எல்லா நிறங்களும் உள்ளது அது ஒரு பொக்கிசம் என பதிலளித்தார்.