• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கோவையில் ரயிலில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் பலி!!

BySeenu

Aug 14, 2026

​ கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இரண்டு பெண் பணியாளர்கள், ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் துப்புரவுப் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் துடியலூர் பகுதியைச் சேர்ந்த யசோதா (24) மற்றும் ஊட்டியைச் சேர்ந்த கவிதா (43) ஆகிய இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
​அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்த ரயில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட யசோதா மற்றும் கவிதா ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது உடல் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ரயில்வே தண்டவாளங்கள் போன்ற அதிக ஆபத்தான பகுதிகளில் தூய்மைப் பணி மேற்காள்ளும் போது, ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ​எச்சரிக்கை அளிக்கத் தகுந்த மேற்பார்வையாளர்கள் (Supervisor) நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

​தூரத்தில் இருந்தே ரயில்களை எச்சரிக்க மற்றும் பணியாளர்களை அடையாளம் காண சிவப்புக் கொடி மற்றும் பாதுகாப்புச் சட்டைகள் (Safety Coats) வழங்கப்பட்டு இருக்க வேண்டும்.

​ஆனால், எந்தவித அடிப்படைப் பாதுகாப்புக் கருவிகளுமின்றி, மேற்பார்வையாளரையும் நியமிக்காமல் இரு பெண்களையும் பணியில் அமர்த்தியதே இந்த கொடூர விபத்திற்குக் காரணம் எனக் சமூக ஆர்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உயிர்ப்பலிக்குக் காரணமான சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், பலியான பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கி, அலட்சியமாகச் செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீது கடுமையான சட்டப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.