ராஜீவ்காந்தி படுகொலைக்கு நீதி கேட்டு கோவில்பட்டி அருகே காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மரத்தில் தலைகீழாக தொங்கி நூதனப்போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் சம்ந்தப்பட்டது ஊர் அறிந்த ஒன்று. இந்த 7 பேருக்கும் வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு, காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவர் அய்யலுசாமி இன்று காலை மரத்தில் தலைகீழாக தொங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறைவேற்ற பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் , உணர்வு என்ற அடிப்படையில் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி கோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணையில் தமிழக அரசு அவருக்கு ஆதரவாக செயல்படுவது தவறு என்றும் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது அவருடன் உயிரிழந்த 15 பேரில் 14 பேர் தமிழர்கள். அவர்கள் குடும்பங்களுக்கு 5 கோடி ரூபாய் உதவித்தொகையும், காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடியும், மற்றும் அரசு வேலை வழங்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கோரிக்கையை சொல்லி கண்டன கோஷங்களையும் எழுப்பினார். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மரத்தில் தலைகீழாக தொங்கியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை வாபஸ் பெற்று ராஜீவ் காந்தி மற்றும் அவருடன் இறந்த 15 பேர் கொலையில் நீதியை நிலை நிறுத்த வேண்டி தற்போது இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்” என்றும் அவர் கூறினார். இதில் கயத்தாறு ஒன்றிய முன்னாள் தலைவர் செல்லத்துரை, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராமதாஸ், சுப்பாராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.