கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்து மாணவ – மாணவிகள் சிலர் காவி உடை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, முதல் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் கர்நாடக உயர் நீதிமன்றத்தை சென்றடைந்தது. அங்கே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவ – மாணவிகள் எந்தவித மத அடையாளங்களையும் பிரதிபலிக்கும் ஆடைகள் அணிந்து வரக் கூடாது என இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவரான முகரம் கான், கலபுகி என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “அவர்கள் என்ன உடை அணிகிறார்கள்..? அவர்கள் காவி உடை அணிந்து கொண்டு நம்முடைய குழந்தைகளை ஹிஜாப் அணியக் கூடாது என எவ்வாறு கூறலாம்..? ஹிஜாப் அணிவது நம்முடைய குழந்தைகளின் விருப்பம். ஹிஜாப் அணியக் கூடாது என்று கூறுபவர்கள் துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள்” எனக் கூறியிருந்தார்.
காங்கிரசின் மூத்த தலைவரான முகரம் கானின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக முகரம் கானை போலீசார் கைது செய்துள்ளனர்.