திருவள்ளூர் மாவட்ட காவல்துறையின் துப்பறியும் பிரிவில் 2009ம் ஆண்டு பிறந்து 57 நாட்களே ஆன நாய்க்குட்டி ஒன்று பணியில் சேர்ந்தது. இதற்கு ரேம்போ என போலீசார் பெயர் சூட்டினர்.
இதையடுத்து ரேம்போவுக்கு காவல்துறை சார்பில் பயிற்சி கொடுக்கப்பட்டது. பின்னர் பல்வேறு குற்ற வழக்குகளை ரேம்போ கண்டறிந்தது. இப்படி கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 257 குற்றச் சம்பவங்களில் இந்த மோப்பநாய் ரேம்போ உதவியுள்ளது.
சில நாட்களாக மோப்ப நாய் ரேம்போ உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தது. பல குற்ற வழக்குகளுக்கு உதவிய ரேம்போ உடலுக்கு திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் உரிய மரியாதையுடன் போலீசார் மோப்ப நாய் ரேம்போவுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்ட மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.