• Thu. Jul 16th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவோடு சேர்ந்து கொரோனாவின் மாற்றான ஒமிக்ரானும் பரவி கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவத்துறை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்கிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, தற்போது தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக விடுமுறை விடப்பட்டால் தடுப்பூசி செலுத்த மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.