கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ மேற்கு மாகாளியம்மன் கோவிலில், முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் கடப்பாரையால் உண்டியலை உடைத்துச் பணத்தைச் சாவகாசமாகத் திருடிச் சென்ற திடுக்கிடும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம், சூலூர் பகுதி காவல் நிலையம் மிக அருகிலேயே அமைந்து உள்ளது. புகழ்பெற்ற ஸ்ரீ மேற்கு மாகாளியம்மன் கோவில். நேற்று நள்ளிரவு சுமார் 2:00 மணி அளவில், முகத்தில் மாஸ்க் அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் ரகசியமாக ஊடுருவி உள்ளார்.

கோவில் வளாகத்திற்குள் சென்ற அந்த நபர், அங்கு காணிக்கை உண்டியலின் அருகே மிகச் சாவகாசமாக அமர்ந்து கொண்டு, தான் கையோடு எடுத்து வந்த கூர்மையான கடப்பாரையைக் கொண்டு உண்டியலின் பூட்டை உடைத்து உள்ளார்.
உண்டியலைப் பலமுறை பலமாக அடித்து உடைத்த அந்த நபர், அதில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி இருந்த ரொக்கப் பணத்தைச் சாதுரியமாக அள்ளித் தனது பையில் திணித்துக் கொண்டு அங்கு இருந்து தப்பிச் சென்று உள்ளார்.
இன்று காலை வழக்கம் போலக் கோவிலைத் திறக்க வந்த பூசாரி மற்றும் நிர்வாகிகள், உண்டியல் உடைக்கப்பட்டுப் பணம் திருடப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்த போது, மாஸ்க் அணிந்த நபர் கடப்பாரையால் உண்டியலை உடைத்துத் திருடும் காட்சிகள் துல்லியமாகப் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

காவல் நிலையம் மிக அருகில் இருக்கும் சூழலிலேயே, எந்தவித பயமுமின்றி நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்துத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இடையே கடுமையான அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




