சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் இன்னே பெய்ய மின்னுமால்- தோழி!
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.
பாடல் : பாலை பாடியவர் : நல்வெள்ளியார்.
பொருளுரை:
தோழீ! மூங்கிலின் வெளிய நெல்லைத் தின்ற வரி பொருந்திய நெற்றியையுடைய யானை; தண்ணிதாகிய நறுமணங் கமழு மலைப்பக்கத்திலே துஞ்சா நிற்கும்; சிறிய இலையுடைய சந்தன மரத்தினையுடைய வாடிய பெரிய காட்டினகத்து; அச்சத்தையுடைய இடமகன்ற சுனையில் நீர் நிறையவும்; பெரிய மூங்கில்களையுடைய மலைப்பக்கத்தில் அருவிகள் ஆரவாரிப்பவும்; கற்களைப் புரட்டிக்கொண்டு ஓடிவருகின்ற மிக்க விசையினையுடைய கானியாற்றின் கண்ணே; பற்றுக் கோடாகிய மூங்கிலும் முழுகுமாறு பெருகிய வெள்ளத்தின் அலைகாட்டிற் சென்று மோதா நிற்கவும்; ஒலிக்கின்ற இடியேற்றொடு முழக்கஞ் செய்து; முகில்கள் இப்பொழுதே மழை பெய்யவேண்டி மின்னா நிற்கும்; இக்காலத்தை நோக்கினவுடன் அவர் இன்னே வந்து நின்னை வரைந்து கொள்வராதலின், நீ வருந்தாதே கொள்!






