• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byதரணி

Aug 30, 2026

நற்றிணை: 012

விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்
பாசம் தின்ற தேய் கால் மத்தம்
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால்
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,
‘இவை காண்தோறும் நோவர்மாதோ;
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!’ என
நும்மொடு வரவு தான் அயரவும்,
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.

பால்: பாலை பாடியவர்: கயமனார்

பொருளுரை:

முடை தீர விளம்பழம் இட்டுவைத்தலானே அதன் மணம் கமழ்கின்ற நிறைந்த தயிர்த்தாழியில; கயிறு ஆடித் தேய்த்தலாலே தேய்ந்த தண்டினையுடைய மத்திட்டு வெண்ணெய் தோன்றக் கடைதலால்; தறியடியில் ஓசை முழங்குகின்ற; தங்கிய இருள் தீரும் வைகறைப் பொழுதில்; தன்மெய் பிறர்க்குத் தோன்றாதபடி மறைத்துத் தன் காலிலணியும் பருக்கைக்கற் போகடப்பட்ட சிலம்பைக் கழற்றி; பல மாட்சிமைப்பட்ட வரிந்த புனைந்த பந்தோடு சேர ஓரிடத்தில் வைக்கச் செல்பவள்; என் தோழிமார் இவற்றைக் காணுந்தோறும் நோவாநிற்பர், அவர் இரங்கத் தக்காரல்லரோ என்று கருதி; நும்மோடு தான் வருதலை மேற்கொண்டொழுகா நிற்பவும்; அவள் கண்கள் தம் அளவுக்கும் அடங்காமல் அழா நின்றன; ஆதலின் நுமக்கு ஏற்றவாறு செய்ம்மின்;