விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திடீர் சோதனையில் நகரமைப்பு அலுவலகத்தில் ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதிலும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் வெள்ளிக்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம் நகராட்சியில் வெள்ளிக்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது
வருவாய் பிரிவில் வரி வசூலின் போது மக்களிடம் அதிக தொகை வசூல் செய்வதாகவும், நகரமைப்பு பிரிவில் கட்டிட அனுமதிக்கு கூடுதல் பணம் வசூல் செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சார் ஆய்வாளர் பூமிநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் துறையினர் சோதனை நடத்தினர் அதில்

நகரமைப்பு ஆய்வாளர் காளீஸ்வரி இடம் இருந்து ரூ.2 ஆயிரம் பறிமுதல் செய்தனர். அலுவலகத்தில் இருந்த ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளர் பாண்டியன் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். வருவாய் பிரிவில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருந்ததால் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.





