கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், அரசு விதிமுறையின்படி பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியரை, “அமைச்சர் உறவினர்” என கூறிய நபர் தாக்கியதாக புகார் எழுந்து உள்ளது. இதில் காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு நேற்று மதுபோதையில் ஒருவர் வந்து உள்ளார். அவர் பாட்டிலில் பெட்ரோல் வழங்குமாறு ஊழியரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பெட்ரோல் பாட்டில்களில் வழங்கக் கூடாது என்ற அரசு உத்தரவு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை சுட்டிக்காட்டி ஊழியர் மறுத்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், “எனக்கு பெட்ரோல் கொடுக்க வேண்டும். நான் த.வெ.க. அமைச்சர் ஒருவரின் அண்ணன் மகன்” என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஊழியரை தாக்கியதாகவும், இதில் அவர் காயம் அடைந்ததாகவும் தெரிகிறது.
தாக்குதலில் காயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமைச்சர் உறவினர் என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் காந்திபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



