காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர்- சனீஸ்வரபகவான் தேவஸ்தானம் அமைந்துள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் அபயஹஸ்த முத்திரையுடன் நவகிரகங்களில் ஒன்றான சனீஸ்வரபகவான் இங்கு தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார். இதனால் சனிதோஷம் நீங்க வேண்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

புகழ்பெற்ற இத்தேவஸ்தானத்தின் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா திரு தேரோட்டமானது இன்று நடைபெற்றது. வினாயகர், முருகன், தியாகராஜர், நீலோத்பாலாம்பாம்பிகை, சண்டிகேஸ்வரர் என அலங்கரிப்பட்ட ஐந்து தேர்களையும் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் வடம் பிடித்து இழுத்தார். அதனை தொடர்ந்து தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் ஏற்பாட்டில் மேல வீதியில் அன்னதானம் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து திருநள்ளாறு கோயிலுக்கு உட்பட்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் 50க்கும் மேற்பட்டோருக்கு சால்வை அணிவிக்கும் வேட்டி வழங்கியும் கௌரவித்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் மீனாட்சி சுந்தரம், தொகுதி தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.





