தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வனராஜ் (42) – ஜெயலட்சுமி (30).
இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு, பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட இடப்பிரச்சினையை தட்டிக் கேட்குமாறு கணவர் வனராஜ்-ஐ மனைவி ஜெயலட்சுமி கூறியுள்ளார்.

அதற்கு, எப்போதும் உனக்கு இதே வேலையாக இருக்கிறது. “நீ செத்துப் போ” எனக் கூறி மனைவி ஜெயலட்சுமியை கணவர் வனராஜ் திட்டியதால் மனமுடைந்த ஜெயலட்சுமி தனக்குத்தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக வழக்குப் பதிந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் வனராஜை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று குற்றவாளி வனராஜ்-க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய்.2,000 அபராதமும் அதை செலுத்தத் தவறினால் 1 ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி அனுராதா தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பினை தொடர்ந்து குற்றவாளியை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.






