ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து கேரளா சென்றிருந்தார்.

படப்பிடிப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த ரஜினிகாந்த், விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். ரசிகர்கள் சால்வை அணிவித்து, மலர்மாலை வழங்கி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.
அப்போது, நடிகர் ரஜினியுடன் ரசிகர்கள் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். விமான நிலையம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் உற்சாகக் கோஷங்களால் பரபரப்பாக காணப்பட்டது.

இந்த நிலையில், ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழை வழங்கினார். மேலும், அந்த ரசிகரின் மகள் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அவர்களிடம் புன்னகையுடன் பேசிய ரஜினிகாந்த், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
பின்னர், கார் நோக்கி சென்றபோதும் ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த் அனைவருக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டார்.
ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.






