புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் திருவரங்குளம் அருகே பூந்தோட்டம் என்ற இடத்தில் ஏழுமுகக் காளியம்மன் கோவில் உள்ளது. பொற்பனைக்கோட்டை கோவிலின் பரிவார தெய்வங்களில் ஒன்றாகவும் பொற்பனைக்கோட்டை ஆளுகைப் பகுதியில் தென்பகுதியாகவும் விளங்கி வந்த திருவரங்குளம் அருகே இந்த கோவில் எழுப்பப்பட்டு 35 அடி உயரமுள்ள காளியம்மன் சிலை மிக மிகப் பிரமாண்டமாக காட்சி தருகிறது.

கடந்த ஏழு ஆண்டுகளாக காப்பு கட்டுதல் பால்குடம் காவடி எடுத்தல் போன்ற நிகழ்வுகளோடு அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே பிப்ரவரி மாதத்தில் முதல் வாரத்தில் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகவும். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மாசி மாதம் தான் எல்லா கோவில்களின் திருவிழாவும் தொடங்கும். அதற்கு முன்னதாகவே தை மாதம் பின்வாரத்தில் இந்த பூச்சொரிதல் விழா தொடங்கி விடுவதால் புதுக்கோட்டையில் மாவட்டத்தின் முதல் திருவிழாக்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
இந்த வகையில் நடத்தப்பட்ட இந்த பூச்சொரிதல் விழாவுக்காக திருக்கட்டளை கிராமத்தில் இருந்து பாலா அம்பலகாரர் தலைமையிலும் திருவரங்குளம் பகுதியில் இருந்து சங்கர் மற்றும் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் சிதம்பரம் தலைமையிலும் இலங்கைத் தமிழர் குடியிருப்பில் உள்ள முகாம் தலைவர்களின் தலைமையிலும் அலங்கார வாகனங்களில் அம்மன் சிலை மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக பூத்தட்டுகள் கொண்டுவரப்பட்டன.

இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பெண்களும் ஆண்களுமாக தலையில் பூத்தட்டுகளை சுமந்து வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளையும் நிகழ்ச்சிகளையும் வேலு பூசாரி தலைமையிலான கார்த்திக் பூசாரி அருணாசலம் பூசாரி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இரவில் அன்னதானமும் நாடக நிகழ்ச்சிகளும் வான வேடிக்கையும் நடைபெற்றன.










