தமிழ்நாடு சட்டசபையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்ய உள்ளார்.
2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் புதிய அறிவிப்புகளை பட்டியலிட்டார். இந்நிலையில், 2025-2026-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த கூட்டத் தொடர் 17-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம் பெறும். தொடர்ந்து, 24-ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.