கனமழை காரணமாக அர்ஜென்டினாவின் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
தென் அமெரிக்கா நாடான அர்ஜென்டினா நாட்டில் பியூனோஸ் அயர்ஸ் மாகாணம் பாஹியா பிளான்கா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. விடாது பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அர்ஜென்டினாவில் பெய்த கனமழை, வெள்ளத்தால் ஏற்கெனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.