சீமானும் பிரபாகரனும் உணவு அருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி வரும் சீமான், என்னுடன் நேரடி விவாதத்திற்குத் தயாரா என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் போலியானவை என்றும் அதை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியிருந்தார். அவரின பேட்டி தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அந்த புகைப்படம் எடிட் என்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என்று சீமான் கூறியிருந்தார். அதற்கும் சங்ககிரி ராஜ்குமார் பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் எல்டிடிஈ தலைவர் பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில்,
எங்களின் தங்கை என போலியான பெண் ஒருவர் கடந்த வருடம் முழுவதும் எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்தார். அப்போதெல்லாம் சீமான் வாயைக் கூட திறக்கவில்லை. எங்களிடம் தொடர்பிலும் இல்லை. ஆனால் ஊடகங்களில் எங்கள் குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருப்பதாக போலியான தகவல்களைப் பரப்பி வருகிறார். சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான், ஆனால், அவர் சொல்வதுபோல் மணிக்கணக்கில் எல்லாம் அந்தச் சந்திப்பு நடக்கவில்லை. றைந்தது எட்டில் இருந்து 10 நிமிடம் வரை சந்திப்பு நடந்திருக்கலாம். அவர் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். சீமான் விருப்பம் தெரிவித்து அங்கு வருகிறார். சித்தப்பா யார் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டாலும் புகைப்படம் எடுத்துக் கொள்வார். ஆனால் அதனை வருபவர்களின் கேமராக்களில் எடுக்க அனுமதி கிடையாது. குடும்ப உறவினர்களே ஆனாலும் பாதுகாப்பு காரணமாக இயக்கத்தின் கேமராவில் தான் புகைப்படம் எடுக்கப்படும். அதன்பிறகு அந்தப் புகைப்படத்தை அவர்களிடம் கொடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
ஒருவேளை அப்படியான கட்டுப்பாட்டில் சீமானின் புகைப்படம் கொடுக்கப்படாமலும் இருந்திருக்கலாம். அதனால் அவர் தனது அரசியல் தேவைக்காக இப்படியான ஒரு எடிட் செய்த புகைப்படத்தை உபயோகித்து வருகிறார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு ஆவணப்படம் எடுப்பதற்கான வேலைகள் நடந்துக் கொண்டிருந்த போது தான் இவர் அங்கு சென்றார். எல்லாளன் பட ஒளிப்பதிவாளரான சந்தோஷ் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தார். சந்தோஷ் தற்போது கனடாவில் உள்ளார். அவர் வாயைத் திறந்தால் இன்னும் அதிகமான உண்மைகள் வெளிவரும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஒரு தமிழ் தனியார் தொலைக்காட்சிக்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நேற்று இரவு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சேரலாதன் மூலமாக தான் பிரபாகரனுக்கு சீமான் அறிமுகமானார். அதுவரை சீமானை யாரென்றே பிரபாகரனுக்குத் தெரியாது. சீமான், பிரபாகரன் சந்திப்பு நடந்தது உண்மை தான். இந்த சந்திப்பு 2008 பிப்.13-ம் தேதி நடைபெற்றது. அந்த சந்திப்பு வெறும் 8 முதல் 10 நிமிடங்கள் வரை மட்டுமே இருந்தது. சீமான் சொல்வதுபோல், பிரபாகரனின் மனைவியுடன் பழகியதெல்லாம் கிடையாது. சீமானும் பிரபாகரனும் உணவு அருந்துவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதுவும் சீமான் கூறியதுபோல ஆமைக்கறி, இட்லி கறி சாப்பிட்டதெல்லாம் பொய்.
சீமான் ஆயுதங்களுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை என் கேமராவில் தான் படமெடுத்தேன். அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது. தற்போது சீமான் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்டதாக கூறப்படும் புகைப்படம் போலியானது. ஏனென்றால் புகைப்படங்கள், வீடியோ என்னிடம் மட்டுமே உள்ளது. மற்றவர்களுக்கு நடந்த விஷயங்களை தனக்கு நடந்ததாக சீமான் பொய் கூறி வருகிறார். பிரபாகரனை சீமான் சந்திக்கும் போது, அங்கு தமிழேந்தி இருந்ததாகவும், சீமான் தான் தமிழை ஏந்தி பிடித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால், இந்த சம்பவம் நடந்தது தடா சந்திரசேகரனுக்குத்தான்.
மேலும், உச்சக்கட்ட போரின் போது ஆமைக்கறி உள்ளிட்ட உணவுகள் அங்கு பரிமாறப்பட்டன. ஆனால், சீமானுக்கு ஆமைக்கறி கிடைக்கவில்லை. அவருக்கு உடும்பு கறி மட்டுமே பரிமாறப்பட்டது. நான் ஈழத்தில் 7 மாதங்கள் தங்கியிருந்தேன். நாம் சாப்பிடுவதை குறிப்பெடுக்கும் கட்டமைப்பு விடுதலை புலிகளிடம் கிடையாது. பொய்யை மட்டும் வைத்து பிழைப்பு நடத்தும் சீமான், நேருக்கு நேர் என்னுடன் விவாதிக்கத் தயாரா? என்னிடம் அத்தனைக்கும் ஆதாரங்கள் வீடியோவாக, புகைப்படங்களாக உள்ளது என்றார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.