சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்தாண்டு ரூ.20 கோடிக்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான 48-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
நிறைவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பதிப்பு துறையில் 25 மற்றும் 50 ஆண்டுகள் சேவை புரிந்த 14 பேர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கி கவுரவித்தார். 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தகக் காட்சியை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் பார்வையிட்டுள்ளதாகவும், சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.