பெரம்பலூர் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கூட்டமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே. பாலமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் என். செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் பி. விஜயபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இணைச் செயலாளர் பி.சிவக்குமார், மண்டல தலைவர் சி. ராஜாராம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கட்டுமானப் பொருட்களுக்கு 28 சதவீதமாக உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கட்டுமானப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை விற்பனை ஆணையம் அமைக்க வேண்டும். பொறியாளர் கவுன்சில் அமைத்து பொறியாளர்களின் நலனை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றும் கட்டுமானத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.