சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரு நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
ஆகஸ்டு 24ந்தேதி முதல் 29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முற்பகல் மற்றும் மதிய வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடிக்கடி பெய்யும் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.