ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.
ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அண்மையில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்திருக்கிறோம். இந்த தேர்தலில் ஆளுங்கட்சி முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது. வெற்றி பெற்றவர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்திருக்கிறார்கள். அதிமுக வேட்பாளர்களது வெற்றியை தாமதமாக அறிவித்தனர். ஆனால் திமுகவினர் வெற்றியை உடனுக்குடன் அறிவித்தனர்.
ஆளுங்கட்சியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் சரியாக பணியாற்றவில்லை.
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுகவினரை தோல்வியுற்றவர்களாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் வற்புறுத்தியிருக்கிறோம். நீதிமன்றத்தின் உத்தரவையும் கூட தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர் மீது அமைச்சரின் உதவியாளர் பொதுமக்கள் முன்னிலையில் காவலரை அடிக்கிறார். மக்களை பாதுகாக்கும் காவலருக்கே இந்த நிலைமை என்றால், மக்களுக்கு எந்த நிலைமை என்பதை பார்க்க வேண்டும்”
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக நடக்கும் என்பதை உறுதிபடுத்தவும் கவர்னர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கொடியை பயன்படுத்துவது தொடர்பாக சட்டப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.