ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்..
ஹிஜாப் அணிந்த மருத்துவருக்கு மிரட்டல் விடுத்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர், திருப்பூண்டியில் ஹிஜாப் அணிந்து பணி புரிந்த மருத்துவருக்கு மிரட்டல் என புகார் எழுந்துள்ளது. விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு மருத்துவத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட மருத்துவ அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணை அறிக்கையை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், திருச்சியில் சித்த மருத்துவத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் கோரியுள்ளோம். சித்த மருத்துவத்தில் காலிப் பணியிடங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளோம். மான் கொம்புகளை கொண்டு உயிர் காக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும்.தானாக உதிர்ந்து விழும் மானின் கொம்புகளை இம்ப்காப்ஸ்க்கு வழங்க மத்திய அரசிடம் கோரப்படும் என்றார். இருவிரல் சோதனை குறித்து அமைச்சர் பேசுகையில், சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்த விவகாரத்தில், குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை செய்யப்படவில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். சிதம்பரம் விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் ஆணையம் ஆய்வு செய்தது.
ஆளுநர் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்படுகிறது.தேசிய ஆணையம், மருத்துவர்கள் கூறியதை மாற்றிக் கூறியுள்ளது. மருத்துவர்கள் விசாரணையில் எவ்வித தவறும் நடைபெறவில்லை என கூறப்பட்டது. விசாரணை முடிந்து வெளியே வந்த பின் ஆளுநருக்கு ஆதரவாக மாறுபட்ட கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் செயல்படுவது ஆணையத்திற்கு செய்யும் அநீதி என தெரிவித்தார்.