• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Apr 28, 2023

நற்றிணைப் பாடல் 170:

மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள்
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அம் தழை தைஇ துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே
எழுமினோ எழுமின் எம் கொழுநற் காக்கம்
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு நம்
பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே

பாடியவர்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: மருதம்

பொருள்:

 விறலி வீட்டு முற்றத்தில் ஆடிக் காட்ட வருகிறாள். தனியே வருகிறாள். (துணை இலள்). மருண்டு பார்க்கும் மடப்பம் பொருந்திய கண் பார்வை. தகரம் பூசி மணக்கும் கூந்தல். மூங்கில் போன்ற தோள். வரிசையில் அமைந்திருக்கும் வெண்ணிறப் பற்கள். காலின் தொடைகள் நெருங்கியிருக்கும் குறங்கு, உடுத்திய தழையாடை. ஆகியவற்றுடன் அவள் நிற்கிறாள். அவளைப் பார்த்துத் தலைவி சொல்கிறாள். எழுந்து போய்விடு, எழுந்து போய்விடு. இல்லாவிட்டால் என் கணவனுக்குச் செல்வம் ஆகிவிடுவாய், என்கிறாள். முள்ளூர் என்னுமிடத்தில் போர். ஆரியர் படையுடன் தாக்கினர். முள்ளூர் மன்னன் மலையன். அவனது ஒரு வேலுக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. திரும்பி ஓடிவிட்டனர். அதுபோல, பலர் ஒன்று திரண்டாலும், இவள் ஆடல் அழகுக்கு ஈடுகொடுக்க நம்மால் முடியாது, என்று தலைவி நினைத்து விறலியை விரட்டுகிறாள்.