நற்றிணைப் பாடல் 169:
முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்
வருவம் என்னும் பருவரல் தீர,
படும்கொல் வாழி நெடுஞ் சுவர்ப் பல்லி
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லிப் பரீஇ
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே
பாடியவர்: ஆசிரியர் பெயர் தெரியவில்லை
திணை: முல்லை
பொருள்:
நெஞ்சே! நினைத்ததை முடித்துவிட்டோமாயின், நாம் நம் நன்னுதலிடம் செல்ல வேண்டும். அவள் நான் வருவேன் என்று எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள். அவள் துன்பம் தீரச் சுவரில் இருக்கும் பல்லி ஒலிக்குமோ ஒலிக்காதோ?
செழித்து வளர்ந்திருக்கும் முல்லை, தலையைப் பரப்பிக்கொண்டு விரிந்திருக்கும் கள்ளியின் மேல் பூத்திருக்கும். முல்லை இடையன் மேய்க்கும் வெண்ணிறக் குரும்பை ஆடுகளின் தலைகள் போலப் பூத்திருக்கும். அவற்றைப் பகலில் பறித்துத் தொடலை மாலையாகக் கட்டி அணிந்துகொள்வான். தெருவெல்லாம் கமழும்படி பாக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்குத் திரும்புவான். நான் இங்கே இருக்கிறேனே! பொருள் தேடிக்கொண்டிருக்கையில் தலைவன் இவ்வாறு நினைக்கிறான்.