

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மாரியம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. திருக்கோவிலுக்கு தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தை மற்றும் மாசி மாதங்களில் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை வந்த வண்ணம் உள்ளனர். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் இன்று இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்றது. இதில் பக்தர்களின் காணிக்கையாக சுமார் ரூ. 85 லட்சம் காணிக்கை பணம் கிடைத்துள்ளது.

11 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள காணிக்கை பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டன. அதில் ரூ. 84லட்சத்து 63 ஆயிரம் 425 ரொக்க பணமும், தங்கம் – 119.650 கிராம், வெள்ளி- 1010.900 கிராம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது. எண்ணிக்கை என்னும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி கோவில்பட்டி மதுரை பகுதிகளைச் சேர்ந்த பக்தர் குழு மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்து அறநிலைய துறை விருதுநகர் கோவில் உதவி ஆணையர் நாகராஜன் மற்றும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உதவி ஆணையர் இளங்கோவன் முன்னிலையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக அரசு உத்தரவின் படி உண்டியல் திறப்பு பணிகள் வெளிப்படை தன்மை உடன் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு கோயில் இணையம் வழியாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது.

