• Wed. Mar 19th, 2025

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 8 அரிய வகை உயிரினங்கள்

ByPrabhu Sekar

Mar 12, 2025

மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட, இந்தோனேசியா நாட்டின் சுமத்திரா தீவுப் பகுதியைச் சேர்ந்த 8 அரிய வகை உயிரினங்களை, சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த அரிய வகை உயிரினங்களில் 3, மூச்சு திணறி உயிரிழந்து விட்டன. இதை அடுத்து உயிருடன் இருந்த 5 அரிய வகை உயிரினங்களும், மலேசிய நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டன.

இந்த உயிரினங்களை சட்ட விரோதமாக விமானத்தில் கடத்திக் கொண்டு வந்த, சென்னையைச் சேர்ந்த 2 கடத்தல் பயணிகளையும், சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, சிறையில் அடைப்பு.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தது. அந்த விமானத்தில் அரிய வகை உயிரினங்கள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள், அரிய வகை உயிரினங்கள் கடத்தலை கண்டுபிடிப்பதற்கான, சுங்கத்துறை மோப்ப நாயுடன், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் வருகை பகுதியில், தயாராக இருந்தனர்.

அந்த விமானத்தில் இறங்கி வந்த பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.அப்போது சென்னையைச் சேர்ந்த 2 ஆண் பயணிகள், பெரிய கூடைகளுடன் விமானத்திலிருந்து இறங்கி வந்தனர். சுங்க அதிகாரிகள் சந்தேகத்தில் அவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை பரிசோதித்தனர். அந்தக் கூடைகளுக்குள் அரிய வகை உயிரினங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அவர்கள் இருவரையும் வெளியில் விடாமல் நிறுத்தி வைத்து விட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

2 பேர் வைத்திருந்த கூடைகளுக்குள்ளும் 8 அரிய வகை உயிரினங்கள் இருந்தன. அவைகளில் 3 அரிய வகை உயிரினங்கள், மூச்சு திணறி உயிரிழந்து விட்டன. 5 அரிய வகை உயிரினங்கள் மட்டும் உயிருடன் இருந்தன. அவர்கள் கடத்திக் கொண்டு வந்த, வெள்ளி இலை குரங்கு (silvery lugunt) 1, பளிங்கு போல் கேட் (marbled polecat) 2, கிழக்கு சாம்பல் கிப்பன் குரங்கு (eastern grey gibbon) 4. ஆசிய மரநாய் (sumatran white-bearded palm civet) 1. இவைகள் அனைத்தும் இந்தோனேசியாவின் சுமத்திரா மற்றும் ஜாவா தீவு பகுதிகளில் வசிப்பவைகள். அதைப்போல் ஐரோப்பா, சீனா போன்ற பகுதிகளிலும் இந்த அரிய வகை உயிரினங்கள் காணப்படும்.

இந்த 8 அபூர்வ உயிரினங்களில், ஆசிய மரநாய் 1, கிழக்குச் சாம்பல் கிப்பன் குரங்கு 2 , ஆகிய 3 உயிரினங்கள், உயிரிழந்து விட்டன. மற்ற 5 அபூர்வ உயிரினங்கள் உயிருடன் இருந்தன.

இந்த நிலையில் இந்த உயிரினங்கள் அனைத்துமே முறையான ஆவணங்கள் இன்றி, மருத்துவ பரிசோதனைகளும் இல்லாமல், சட்ட விரோதமாக கடத்திக் கொண்டுவரப்பட்டவை என்று தெரிய வந்தது. இவைகள் மூலம் நமது நாட்டிற்குள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள், மனிதர்கள் ஆகியோருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும். அதோடு நீர் நிலைகளும், வனப்பகுதியும் பாதிப்புக்குள்ளாகும். எனவே இவைகளை அனைத்தையும், எந்த நாட்டில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டதோ, அந்த நாட்டிற்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி உயிருடன் இருந்த 5 அரிய வகை உயிரினங்களையும், இன்று அதிகாலை மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. உயிரிழந்துவிட்ட 3 உயிரினங்களையும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, தீயிட்டு அழிக்கப்பட்டன.

அதோடு இந்த உயிரினங்களை சட்ட விரோதமாக விமானத்தில் கடத்திக் கொண்டு வந்த, சென்னையைச் சேர்ந்த 2 பயணிகளையும், சுங்க அதிகாரிகள் சுங்க சட்ட விதிகளின்படி கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.