சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள நெலரிசி மொத்த வியாபாரிகள் திருமண மண்டபத்தில், Calm Mind Wellness Centre சார்பில் நடைபெற்ற “ஆஸ்கர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” சாதனை நிகழ்ச்சி குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை Calm Mind Wellness Centre-ன் திருமதி சுமதி பழனி, ரெட்ஹில்ஸ் பிரைன் ஹப்பின் திருமதி ஈஸ்வரி தயாநிதி, போகர் மகாரிஷி யோகாலயம் திருமதி நளினி ரவி மற்றும் பழைய பெருங்களத்தூர் அமைதியான மனநல மைய கிளை நிர்வாகிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து, குத்துவிளக்கு ஏற்றுதல், ஜலதீபம் மற்றும் வரவேற்புரை நடைபெற்றது. தொடர்ந்து குழந்தைகளின் இசை, நடனம், சங்கநாதம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

குறிப்பாக குழந்தைகளின் உள்ளுணர்வு திறன், நினைவாற்றல், ஒருமுகப்படுத்தும் திறன் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட Blindfold செயல்பாடுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் உள்ளிட்ட சாகச திறன்களை குழந்தைகள் திறம்பட செய்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
மேலும், “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒரு தெய்வம் தந்த பூவே” பாடலுக்கு சிறுமி பிரிசில்லா குளோரி வழங்கிய நடன நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது அசைவுகளும் உணர்வுப்பூர்வமான நடனமும் அரங்கில் இருந்தவர்களின் பாராட்டுகளைப் பெற்றது.
நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து விருது வழங்கும் விழா, பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட விருதுகள் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தன.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், குழந்தைகளின் Blindfold சிலம்பம் உள்ளிட்ட திறன் வெளிப்பாடுகளை பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

குழந்தைகளின் மறைந்துள்ள திறமைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி, அவர்களின் மனவளர்ச்சி மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என Calm Mind Wellness Centre நிர்வாகம் தெரிவித்தது.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. குழந்தைகளின் சாதனைகளை பாராட்டிய பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், அவர்கள் எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.




