

இலங்கையில் வனவிலங்கு சரணாலயம் அருகே அதிவேகமாக வந்த ரயில் மோதி 6 யானைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்னேரியா- -கல்லோயா வழித்தடத்தில் அதிகாலையில் இந்த சோகச்சம்பவம் நடைபெற்றுள்ளது. தண்ணீரை தேடி வந்த இரண்டு யானைகளும், நான்கு யானை குட்டிகளும் இந்த விபத்தில் இறந்தன. இந்த விபத்து ஹபரானா நகரில் உள்ள வன விலங்கு சரணாலயம் அருகே ரயில் வேகமாக சென்று கொண்டிருந்த போது, தண்டவாளத்தை கடக்க யானைகள் முயன்றுள்ளன.
அப்போது ரயில் மோதியதில் 6 யானைகளும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன. மேலும் இதில் படுகாயமடைந்த யானைகளை வனத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதேபோல் யானைகள் மீது ரயில் மோதிய விபத்தில் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை துணை அமைச்சர் ஆண்டன் ஜெயக்கொடி கூறுகையில், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க தண்டவாளம் அருகே யானைகள் செல்வதை தடுக்க மின் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

