

இலங்கை கடல் பகுதியில் 430 கிலோ கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேசுவரத்திற்கு மிக அருகாமையில் உள்ளது இலங்கை கடல் பகுதி. ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, பீடிஇலை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்துவது தொடர்கிறது. இந்த நிலையில் இலங்கை கல்பட்டி கடல் பகுதியில் நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் தமிழகத்தை சேர்ந்த ஒரு மீன்பிடி நாட்டு படகு ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த நாட்டுப்படகில் சுமார் 430 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த 5 பேரில் 3 பேர் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் என்பதும் மற்ற 2 பேர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
