பெரியார் பல்கலைக்கழகத்தில் 20வது பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 196 பட்டதாரிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழகத்தின் பெரியார் கலையரங்கில் நடைப்பெற்றது.
விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு, பல்கலைக்கழக துறைகளில் முதுகலையில் முதலிடம் பிடித்த 55 மாணவர்கள், இளங்கலையில் முதலிடம் பிடித்த 4 பேர், பல்கலைக் கழகத்துடன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் படித்து முதுகலையில் முதலிடம் பிடித்த 61 பேர், இளங்கலையில் முதலிடம் பிடித்த 76 பேர் என, மொத்தம் 196 மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கத்துடன், பட்டச் சான்றிதழை வழங்கினார்.
தொடர்ந்து முதுமுனைவர் பட்டத்தை நிறைவு செய்துள்ள 6 பேருக்கும், முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 575 மாணவர்களும் என மொத்தம் 777 பேருக்கு, விழா மேடையில் அமைச்சர் பொன்முடி, பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் கோவிந்தன் ரங்கராஜன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டனர்.
விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதிவாளர் (பொ) தங்க வேல், தேர்வாணையர் (பொ) கதிரவன் மற்றும் ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.