மதுரை மாவட்டத்தில் ரூபாய் 2.084.08 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து செய்தியாரை சந்தித்தார்
தமிழகத்தில் ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல் தடுத்து தூய்மையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
மதுரை, ஓபுளாபடித்துறை அருகே இன்று நடைபெற்ற விழாவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மதுரை மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1,191 ஊரக குடியிருப்புகளுக்கான 3 கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, உசிலம்பட்டி நகராட்சிக்கான பிரத்யோக குடிநீர் திட்டப் பணிகள், மதுரை மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் கரைப்பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலம், அறிஞர் அண்ணா மாளிகை 50-ஆம் பொன்விழா நுழைவுவாயில் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமை வகித்த இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் ஷிவ் தாஸ் மீனா, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா. மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த இரண்டாண்டுகளில் தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சிகள். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள் என்றார்.
மதுரை மாநகராட்சியில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில்சாலை பணிகள். கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் இதரப் பணிகள் என மொத்தம் ரூ.717. 10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இன்னும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.
மேலும், தமிழகத்தில் ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல் தடுத்து தூய்மையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், அடையாறு. பக்கீம், கூவம் போன்ற ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல் தடுத்திடும்
வகையில் மறுசுழர்ச்சி செய்து பயன்படுத்துதல் போன்ற பணிகளுக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்ற அவர், வைகையாற்றில் கழிவு நீர் கலக்காத வகையிலும் நடவடிக்கைகள் எடுக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
முன்னதாக மதுரை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற 10 பணியாளர்களுக்கு ரூபாய் 13.36 கோடி மதிப்பீட்டில் ஓய்வூதிய பணப்பலனுக்கான ஆணைகளையும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.வ.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, சென்னை பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குர்ராலா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.