விருதுநகர், ஜூலை 28; திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக கழகம் சார்பாக சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை, திமுக, ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் இன்று தமிழகம் முழுக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தரப்படும், நகை கடன் தள்ளுபடி செய்யப்படும், பெட்ரோல் டீசல் விலை ரூ.5 குறைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் தேர்தலின் போது உறுதி அளித்தபடி திமுக பல அறிவிப்புகளை செயல்படுத்தவில்லை என்று கூறி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அதிமுகவினர் தங்கள் வீடுகளுக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்த வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான, ஈ.பி.எஸ். ஓ.பி.எஸ் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.
கொரோனா விதிகளின்படி தொண்டர்கள் கூட்டம் கூடாமல் அவரவர் வீட்டு வாசலிலேயே முழக்கமிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா திமுக கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் மாவட்டம் முழுவதும் அவரவர் வீடுகள் முன்பு திமுகவிற்கு எதிரான பதாகைகளை ஏந்தி இன்று காலை அதிமுகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், எதிர் கோட்டை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரவு செயலாளர் முத்துப்பாண்டியன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட கவுனசிலர் வெங்கடேஷ், சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், சிவகாசி ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் மாரிக்கனி, மகளிரணி ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று சிவகாசி நகரில் நகர செயலாளர் அசன்பதூரூதீன் தலைமையில் 33 வார்டுகளிலும் திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல் தலைமையில் 21 வார்களிலும் சிவகாசி ஒன்றியம் முழுவதிலும் ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், தெய்வம், வேண்டுராயபுரம் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூரில் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போன்று மாவட்டம் முழுவதிலும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், மாவட்ட மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் ஒன்றிய நகர, கழக செயலாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி பதாகைகளை ஏந்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.