தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நிரம்பியதால் அணைக்கு வரும் உபரி நீரை தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் திறந்துவைத்தார். வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருஷநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாலும் ,முல்லைப் பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கொட்டகுடி ஆற்றில் இருந்து தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதாகவும் 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் ஒரு மணி அளவில் 69 அடியை எட்டியது. இதனையடுத்து அணைக்கு வந்த தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் ,கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கையாக அபாய சங்கு ஒலிக்கச் செய்து, அணைக்கு வரும் உபரி நீரை பெரிய மதகுகளின் வழியாக திறந்துவைத்தார். அதன்படி நேற்று முதல் வினாடிக்கு அணையிலிருந்து 730 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கடந்த 4.6 .2021 ஆம் தேதி முதல் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதிகளான 45051 ஒரு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அன்றிலிருந்து இன்றுவரை வினாடிக்கு 900 கனஅடி வீதமும் மற்றும் மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக 69 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த வருடம் வைகை அணை தனது முழு கொள்ளளவை மூன்று முறை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.