
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன்கோட்டை கிராமத்தை சேர்ந்த வனஜோதி என்ற பெண் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான 17செண்ட் விவசாய நிலத்தை வாடிப்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கடந்த 27வருடங்களாக குத்தகைக்கு விட்டு்ள்ளார்.
ஆண்டுதோறும் 10ஆயிரம் ரூபாய் குத்தகை தொகை வழங்கிவந்த நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக குத்தகை பணம் 10ஆயிரம் வழங்காமல் இருந்துள்ளார். இதையடுத்து வனஜோதி சந்திரசேகரிடம் குத்தகை பணம் கேட்ட போது நிலத்தை தான் பட்டா பெற்று விட்டதாகவும், குத்தைகை பணம் வழங்க முடியாது என சந்திரசேகர் கூறி மிரட்டி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து வனஜோதி தனது நிலத்திற்கான பட்டா தர கோரியும், சந்திரசேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்துநிறுத்தி தல்லாகுளம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஆட்சியர் அலுவலகம் முழுவதிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு சோதனைகளுக்கு பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.
