கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீத்திபுரம் பகுதியைச் சேர்ந்த விதவை பெண் ஒருவருக்கு சமூக ஊடகம் மூலமாக கடந்த சில மாதங்களாக அறிமுகம் இல்லாத இரு மொபைல் எண்களிலிருந்து தொடர்ந்து ஆபாச படங்களையும், ஆபாச வாசகங்களையும் அனுப்பி தொல்லை அளிக்கப்பட்ட வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
புகார் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பாலியல் தொல்லை அளித்த நபர் ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதான சதீஷ் என்பதும், அவர் தனது இரண்டு மொபைல் எண்கள் மூலமாக அந்த விதவைப் பெண்ணுக்கு தொடர்ந்து ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததோடு அவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது சொந்த ஊரில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ஏற்கனவே அதே பெண்ணிடம் செல்போன் மூலம் பேசி தொல்லை அளித்து வந்த நிலையில், குளச்சல் போலீசார் அவரை அழைத்து கண்டித்திருந்தனர். எனினும் செல்போன் மூலம் அவரது தொல்லை தொடர்ந்த நிலையில், அடையாளம் காணப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.