மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்ட, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மின் பயனாளர்கள் அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின்கட்டணம் செலுத்தலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 'மிக்ஜாம்'புயல் காரணமாக சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்தது. 2 நாட்களாக குடிநீர், மின்சாரம் செல்போன் சிக்னல் இன்றி தவித்து வந்தனர். தன்னார்வலர்கள், பேரிடர் மீட்பு படை அரசு அதிகாரிகள், பிரபலங்கள் என ஒட்டு மொத்தமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதிலிருந்து மீண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு 4 மாவட்ட மக்களும் அபராதமின்றி மின்கட்டணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவாட்டங்களில் அக்டோபர் மாத மின்கணக்கீட்டின் படி செலுத்தலாம் என மின்சாரவாரியம் அறிவித்துள்ளது. மழை பாதிப்பு காரணமாக 4 மாவட்டங்களில் மின் கணக்கீடு செய்ய சிரமம் உள்ளதாக மின்வாரியம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.