• Thu. Apr 25th, 2024

போகி எனும் இந்திரன் வழிபாடு: தமிழ் மரபின் பண்பாட்டுத் தளுகை.

மழையைத் தெய்வமெனத் தொழுத பிறகே பொங்கலிட்டுத் தளுகை படைத்து மகிழ்ந்திருக்கின்றனர் உழவு மரபினர். அத்தகைய மழைத் தெய்வமே போகி என்பதாகும். மழைத் தெய்வமாக உழவுத் தொழில் மரபினரால் அடையாளப்படுத்தப்படும் இந்திரனுக்குப் போகி என்னும் பெயருமுண்டு. அறுவடைக்கான வேளாண்மை உற்பத்தியைப் போகம் என்னும் சொல்லால் குறிப்பதுண்டு. போகம் விளைவதற்கான அடிப்படை வித்தாக இருப்பது மழைதான். அதனால்தான், போகம் விளைவிக்கும் மழைத் தெய்வத்தைப் போகி என்னும் சொல்லாலும் அடையாளப்படுத்தியுள்ளனர். அதாவது, போகத்தைத் தருவதால் போகி என மழையைக் குறித்துள்ளனர்.
வேளாண்மை விளைச்சல் தரும் மழைத் தெய்வமான போகியை – இந்திரனை அறுவடைக் காலத்திலும் மறவாது நினைவு கூர்ந்து வழிபடும் சடங்கியல் மரபாகப் போகிக்குக் காப்புக் கட்டுகின்றனர். அவ்வகையில், காப்புக் கட்டுதல் எனும் வளமைச் சடங்கு, போகி என்னும் இந்திர மழைத் தெய்வத்தை வணங்கிடும் நோக்கத்தையே புலப்படுத்துகிறது.
கன்னிப் பிள்ளை, கண்ணுப் பூளை, கூழைப்பூ, கூரைப்பூ எனப்படும் புல்செடியானது, பூக்கும்போது புல் தண்டில் வெண்ணிறத்திலான மழைத் துளிகள் கோத்தது போலவும் வழிவது போலவுமான தோற்றத்தைக் கொண்டதாகும். மழைக் காலத்தில் மட்டுமே தளைக்கும் இம்மழைப்பூவைத்தான் பொங்கல் காப்புக் கட்டுக்கான பூவாகக் கருதி இருக்கின்றனர் முன்னோர். எத்தனையோ பூக்கள் இருக்கையில், இந்தப் பூவை மட்டும் காப்புக் கட்டுதலில் முதன்மைப் பூவாகக் கருதியதன் பின்புலமும் குறியீட்டுத் தன்மை வாய்ந்ததாகும். ஆயிரம் கண்ணுடையான் என்னும் இந்திரனைக் குறிக்கும் அடையாளத்துடன் இருக்கும் இந்தப் பூதான், கண் + பூ + இலை = கண்ணுப் பூவிலை – கண்ணுப் பூளை என்றாகியிருக்கிறது.

ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனை – போகியைக் குறியீடாகக் குறிக்கும் நோக்கத்தில்தான் பொங்கல் காப்புக் கட்டுதலில் கண்ணுப் பூவிலை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பூவுடன் மாவிலை, ஆவாரம், வேப்பிலை, தும்பை போன்றவையும் சேர்த்து வீடுகளின் முகப்புகளிலும், காடு கழனிகளின் சனி மூலைகளிலும், கண்மாய், குளத்தங்கரை அய்யனார் கோவில்களிலும், குல சாமிகளாக வழிபடப்படும் முன்னோர் நடுகற்கள் அல்லது கோயில்களிலும் காப்புக் கட்டுவது வளமைச் சடங்கின் அங்கமாகவே இன்னும் இருந்து வருகிறது.

பெரும்பாலும், போகி நாளின் மாலையிலும், தை நாள் பொழுது விடிவதற்கு முந்திய வைகறைப் பொழுதிலும் காப்புக் கட்டி விடுதல் மரபாகும். இத்தகைய மழைக் காப்புக் கட்டுதல் போகி என்னும் இந்திரனை – மழைத் தெய்வத்தை வணங்கியும் நினைவு கூர்ந்தும் நன்றிப் பெருக்கைக் காட்டியும் பொங்கல் சார்ந்த வளமைச் சடங்குகளை உழவு மரபினர் நிகழ்த்தி வந்திருக்கின்றனர்.

எழுத்தாளர் மகாராசன் எழுதிய ‘வேளாண் மரபின் தமிழ் அடையாளம்’ எனும் நூலில் இருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *