உலக தாய்ப்பால் வார விழா ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு தென்காசி மாவட்டம் குருவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குருவிகுளம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கனிமொழி தலைமை வகித்தார். குருவிகுளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் நர்மதா முன்னிலை வகித்து பேசினார். தொடர்ந்து பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், ஆயிரம் பொன்னான நாட்கள் குறித்தும், இணை உணவின் அவசியம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கி விளக்கி கூறப்பட்டது. மேலும் பெண்கள் அனைவரும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்போம்! என உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதில் அரசு மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.